எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு மறுகூட்டலுக்கு மே 24-ம் தேதி முதல் 26-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.




எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு மறுகூட்டலுக்கு மே 24-ம் தேதி முதல் 26-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையம் வழியாகவும் மே 24-ம் தேதி (நாளை) முதல் 26-ம் தேதி மாலை 5.45 மணி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கட்டணமாக மொழித்தாள், ஆங்கிலத் தாளுக்கு தலா ரூ.305, கணிதம், அறிவியல், சமூக அறிவியல், விருப்ப மொழிப்பாடம் ஆகியவற்றுக்கு தலா ரூ.205 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் இடத்திலேயே கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள விண்ணப்ப எண் மூலமாகத்தான் பின்னர் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள முடியும். சிறப்பு துணை பொதுத் தேர்வு பொதுத்தேர்வில் வெற்றிவாய்ப்பை இழந்தவர்கள், தேர்வுக்கு விண்ணப்பித்து கலந்துகொள்ளாதவர்களுக்கு ஜூன் 28-ம் தேதி சிறப்பு துணை பொதுத் தேர்வு நடத்தப்படும். இதற்கு விண்ணப்பிப்பது குறித்து தனியாக அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.