பாராமெடிக்கல் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்!


உலக அளவில் மருத்துவத் துறையில் நவீனமயமாக்கப்பட்டு மிகப்பெரும் வளர்ச்சியடைந்திருக்கும் நாடு இந்தியா. இதற்கு ஆதாரமாக பல சிக்கலான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகமுடித்து மருத்துவ சாதனைகள் படைத்திருக்கின்றன சில இந்திய மருத்துவமனைகள்.

மருத்துவம் கார்பரேட் மயமாகிவரும் நிலையில் அத்துறை சார்ந்த படிப்புகளுக்கு தேவையும் அதிகரித்துவருகிறது. ஆனால், கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளில் மருத்துவப் படிப்பு ‘நீட்’ என்ற நுழைவுத் தேர்வால் எட்டாக்கனியாக்கப்பட்டு மாணவர்களையும் பெற்றோர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. பல மாணவர்கள் டாக்டர்களாக வேண்டும் என்ற கனவோடு எம்.பி.

பி.எஸ். படிக்க வேண்டும் என்று பெரும் முயற்சி மெற்கொள்கிறார்கள். இதுபோன்ற மாணவர்களுக்கு வாய்ப்பு அமையாத சூழ்நிலையில் தாராளமாக பாராமெடிக்கல் எனப்படும் மருத்துவம் சார்ந்த துணை மருத்துவப் படிப்புகளைப் படிக்கலாம்.

சமீபகாலமாக ஏராளமான மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அரசு மருத்துவக் கல்லூரிகளும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் கூட பல பாடத்திட்டங்களை அறிமுகம் செய்துவருகின்றன.