நீட் பயிற்சி மையங்களுக்கு ஜிஎஸ்டி!




நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சி வழங்கும் பயிற்சி மையங்களுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட வேண்டும் என்று உயர்நிலை தீர்ப்பாணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சி வழங்கும் பயிற்சி மையங்களின் சேவைகள் ஜிஎஸ்டி வரி வளையத்திற்குள் வருகிறதா என்பது குறித்துத் தீர்ப்பளிக்குமாறு உயர்நிலைத் தீர்ப்பாணையத்தின் மகாராஷ்டிர அமர்வில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. சிம்பிள் சுக்லா டுடோரியல்ஸ் என்ற பயிற்சி மையம் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ தேர்வுகளுக்கும், பொறியியல், மருத்துவம் மற்றும் இதர அறிவியல் தொடர்பான நுழைவுத் தேர்வுகளுக்காக மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கி வருகிறது. ஆக, ஜிஎஸ்டி சட்டத்தின்படி சிம்பிள் சுக்லா டுடோரியல்ஸ் மையத்தைக் கல்வி நிறுவனமாகக் கருத முடியாது என்று உயர்நிலைத் தீர்ப்பாணையம் தெரிவித்துள்ளது.

நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களும் கல்வி நிறுவனங்கள்தான் என்றும், அவை ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவை என்றும் உயர்நிலைத் தீர்ப்பாணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் வாதிடப்பட்டிருந்தது. உயர்நிலைத் தீர்ப்பாணையத்தின் மகாராஷ்டிர அமர்வு தனது தீர்ப்பில், “தனியார் பயிற்சி மையங்களுக்கு எந்தவொரு பாடத்திட்டமும் இல்லை. மேலும், எந்தவித தேர்வுகளையும் அவை நடத்துவதில்லை. சட்டப்படி எந்தவித தகுதிச் சான்றுகளையும் அளிப்பதில்லை. ஆகையால், நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களில் வழங்கப்படும் கல்விச் சேவைகளுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட வேண்டும்” என்று தெளிவுபடுத்தியுள்ளது.