10, பிளஸ் 1ல் தோல்வி அடைந்தவர்களை டிசி பெற்றுச்செல்ல நிர்பந்திக்க கூடாது : பள்ளிகளுக்கு அறிவுரை வழங்க மெட்ரிக் பள்ளி இயக்குனர் அறிவுறுத்தல்

மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றதை காரணம் காட்டி, ஏற்கனவே படித்த பள்ளியில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு மறுப்பு தெரிவிக்கக்கூடாது.

அந்த மாணவர்களுக்கு அதே பள்ளியில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கையின் போது, முன்னுரிமை அளிக்க வேண்டும். 2017-18 முதல் பிளஸ் 1 பொதுத்தேர்வு ஆக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 ஆண்டுகள் மேல்நிலை ப்படிப்பை மாணவர்கள் படித்து முடிக்க வேண்டும். பிளஸ் 1 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றது, தேர்ச்சி பெறாத மாணவர்களை டிசி பெற்றுச் செல்ல பள்ளி நிர்வாகங்கள் நிர்பந்திப்பதாக புகார் வந்து கொண்டிருக்கிறது.

பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தொடர்ந்து பிளஸ் 2 படிக்க அனுமதிப்பதோடு, சிறப்பு பயிற்சி அளித்து அந்த மாணவர்களை தேர்வில் வெற்றி பெற செய்ய வேண்டும். குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை ஊக்குவித்து வெற்றி பெறச் செய்வதே பள்ளி நிர்வாகங்களின் கடமை. அதனால் மாணவர்களை டிசி பெற நிர்பந்திக்கக்கூடாது என்று திட்டவட்டமாக அறிவிக்கப்படுகிறது.

இந்த சுற்றறிக்கையை அனைத்து மெட்ரிக்குலேசன்/ மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளிகளுக்கு அனுப்பி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்/ மாவட்டக்கல்வி அலுவலர்கள் அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதுதொடர்பாக புகார் வந்தால் மாணவர்களின் நலன் பாதிக்காத வகையில் விசாரணை நடத்தி தக்க அறிவுரை வழங்கி துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மெட்ரிக் பள்ளி இயக்குனர் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Designed by OddThemes | Distributed by Gooyaabi