தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 39.55% பேர் மட்டுமே தேர்ச்சி : இந்திய அளவில் தமிழக மாணவி 12-வது இடம்


MBBS படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை நாடு முழுவதும் இணையதளத்தில் சிபிஎஸ்இ வெளியிட்டது. முன்னதாக நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட்டது. மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம். நாடு முழுவதும் மே 6-ம் தேதி நடந்த நீட் நுழைவுத் தேர்வை 13 லட்சம் பேர் எழுதினார்கள். தமிழ், ஆங்கிலம், உட்பட மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 170 மையங்களில் 1,07,288 மாணவர்கள் நீட் தேர்வினை எழுதினார்கள். தமிழகத்திலிருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் சுமார் 5,398 பேர் தேர்வு எழுதவில்லை. தமிழ் மொழியில் நீட் தேர்வை எழுத 24,726 பேர் விண்ணப்பத்திருந்தனர். அகில இந்திய அளவில் முதல் 50 இடங்களை பிடித்த மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாணவி கீர்த்தனாவை தவிர வேறு யாரும் தமிழக மாணவர்கள் இடம்பிடிக்கவில்லை.

தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 45,333 பேர் மட்டுமே நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 12-வது இடம் பெற்றுள்ளார். பீகார் மாநிலத்தை சேர்ந்த கல்பனா குமாரி 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரோகன் புரோகித் இரண்டாம் இடமும் பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதியவர்களில் 39.55% மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Designed by OddThemes | Distributed by Gooyaabi