525 புதிய தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு அனுமதி


கோவை:தொழில்நுட்ப பிரிவில் நாடு முழுவதும், 525 புதிய கல்லுாரிகள், 2018--19ம் ஆண்டு முதல் செயல்பட அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில், 45 கல்லுாரிகள் புதிதாக அனுமதி பெற்றுள்ளன.

நாடு முழுவதும், 10 ஆயிரத்து 388 தொழில்நுட்ப கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டில், 525 கல்லுாரிகள், இப்பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இதில், 347 பொறியியல் பிரிவின் கீழும், 178 பாலிடெக்னிக் பிரிவின் கீழும் பட்டியலிடப்பட்டுள்ளன. இதன்படி, இக்கல்வியாண்டில், 33.85 லட்சம் இடங்கள் இளநிலை, முதுநிலை பிரிவில் உள்ளன. தமிழகத்தில், ஏழு கல்லுாரிகள் பாலிடெக்னிக் பிரிவிலும், 38 கல்லுாரிகள் பொறியியல் பிரிவின் கீழும் துவக்கப்பட்டுள்ளன.

மேலும், நாடு முழுவதும் செயல்படும் கல்லுாரிகளில் மொத்த மாணவர்கள், சேர்க்கை, என்.ஆர்.ஐ., மாணவர்களுக்கான இடம், என்.பி.ஏ., அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகள், தன்னாட்சி பெற்ற கல்லுாரிகள் உள்ளிட்ட பட்டியலும், ஏ.ஐ.சி.டி.இ., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.