பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ள இந்த மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6-ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.
கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச்) படிப்புக்கு சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள 4 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 360 இடங்கள் உள்ளன. பி.டெக் உணவுத் தொழில்நுட்பப் பட்டப் படிப்புக்கு 40 இடங்கள், பி.டெக். கோழியின தொழில்நுட்பப் பட்டப் படிப்புக்கு 40 இடங்கள், பி.டெக் பால்வளத் தொழில்நுட்பப் பட்டப்படிப்புக்கு 20 இடங்கள் என மொத்தம் 460 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
கட்டணம் எவ்வளவு?: கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்புக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.700, தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட அருந்ததியர், பழங்குடினருக்கு ரூ.350 ஆகும். பி.டெக். படிப்புகளுக்கான கட்டணம் ரூ.1,200, தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட அருந்ததியர், பழங்குடியினருக்கு ரூ. 600 ஆகும். பி.டெக் படிப்புகளுக்கு கடந்த ஆண்டில் தனித்தனி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தற்போது ஒரே விண்ணப்பத்தில் மாணவர்கள் தங்கள் தேர்வுகளைக் குறிப்பிட்டு அனுப்பலாம்.
இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சி.பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
கால்நடை மருத்துவப் படிப்பில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படும். பி.டெக் உணவுத் தொழில்நுட்பப் படிப்பில் 15 சதவீத இடங்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஜூலை முதல் வாரத்தில் தரைவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 3-ஆம் வாரத்தில் முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்றார் அவர்.
இந்தப் பேட்டியின்போது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் திருநாவுக்கரசு, தேர்வுக்குழு கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் கே.என்.செல்வகுமார், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கே.குமணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.