பாடப்பிரிவுகளின் அடிப்படையில் ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த வேண்டுமென, பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் செய்யப்படுவர் என தமிழக அரசு அறிவித்தது. இதன்படி கடந்த 2012, 2013 மற்றும் 2017ம் ஆண்டுகளில் தகுதித்தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு அக்.6 மற்றும் 7ம் தேதிகளில் தகுதித்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தகுதித்தேர்வுகளில் பட்டதாரி ஆசிரியர்களின் பாடத்திற்கு தொடர்பில்லாத வகையில் வினாக்கள் இருந்தன.
பட்டதாரிகள் கூறுகையில், ‘‘ஒருவர் எந்த பாடத்திற்கு ஆசிரியராக நியமனம் செய்யப்பட உள்ளாரோ அதில் தேர்வு வைத்து, தகுதியுள்ளவரா இல்லையா என முடிவு செய்ய வேண்டும். முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வுகள் அந்த வகையில்தான் நடக்கும். ஆனால் தகுதித்தேர்வில் மட்டும் மாறுபட்ட முறையில் வினாக்கள் கேட்கும் முறை உள்ளது. எனவே போட்டித்தேர்வுகளை போல் பாடப்பிரிவுகள் அடிப்படையில் தேர்வு நடத்த நடவடிக்கை வேண்டும்’’ என்றனர்.