2017-18 கல்வி ஆண்டுக்கான அரசு பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் தொடங்கின. கடந்த மாதம் 1-ந்தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கி கடந்த 6-ந்தேதி வரையிலும் நடந்தது. இந்த தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 792 மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர். இதேபோல பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 7-ந்தேதி தொடங்கி கடந்த 16-ந்தேதி வரை நடந்தது. இந்த தேர்வினை 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மார்ச் மாதம் 16-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து சீரான இடைவெளியில் தேர்வுகள் நடைபெற்று வந்தது. எஸ்.எஸ்.எல்.சி. இறுதித் தேர்வான சமூக அறிவியல் தேர்வு நேற்று நடந்தது. சமூக அறிவியல் தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
ஒட்டுமொத்தமாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வினை மட்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நேற்று நடந்த சமூக அறிவியல் தேர்வில் காப்பி அடித்ததாக 10 பேர் பிடிபட்டனர். இதில் 8 பேர் விழுப்புரம் மாவட்டத்தையும், 2 பேர் திருச்சியையும் சேர்ந்தவர்கள்.
பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 16-ந்தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகளும், 23-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளும், 30-ந்தேதி பிளஸ்-1 தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.