எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ரூ.13 லட்சம் கட்டணம்: நிகர்நிலை பல்கலை.களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் சேரும் மாணவர்களிடம் ஆண்டுக்கு ரூ.13 லட்சம் மட்டுமே கல்விக் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஜவஹர்லால் சண்முகம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தமிழகத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேரும் மாணவர்களிடம் ஆண்டுக் கட்டணமாக ரூ. 18 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை, பட்டயப் படிப்பு, சிறப்பு மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு கட்டணம் எவ்வளவு வசூலிக்க வேண்டும் என ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளுக்கும் உரிய கட்டணத்தை நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: 

நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகள் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய கல்விக் கட்டண நிர்ணயக் குழுவை, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வரும் 30 -ஆம் தேதிக்குள் அமைக்க வேண்டும். அந்தக் குழு 6 வார காலத்துக்குள் கட்டணத்தை நிர்ணயம் செய்து அதுதொடர்பான அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

அதுவரை தமிழகத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகள் எம்.பி.பி.எஸ். சேரும் மாணவர்களிடம் கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.13 லட்சம் மட்டுமே வசூலிக்க வேண்டும். ஒருவேளை கல்விக் கட்டணக் குழு அதிகமான தொகையை நிர்ணயித்தால் எஞ்சிய தொகையை மாணவர்கள் செலுத்த வேண்டும்; ரூ.13 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் மீதித் தொகையை கல்லூரி நிர்வாகம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.