நீட் தேர்வு பாதிப்பு - 25 ஆயிரம் பேர் கருத்து ...!

நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து 25 ஆயிரம் பேர் கருத்துக்கள் அனுப்பியுள்ளதாக நீதியரசர் ஏ.கே.ராஜன் கமிட்டி தெரிவித்துள்ளது.

நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதனையடுத்து, நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையிலான 8 உறுப்பினர்கள் கடந்த 10 ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டனர்.

கடந்த 14-ஆம் தேதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.ஜே.ராஜன், நீட் தேர்வால் பாதிப்பு உள்ளது என்ற தகவல்களை சேகரித்து அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளோம்.

இதனையடுத்து, நீட் தேர்வில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அரசிடம் ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் வரும் 23-ம் தேதிக்குள் அஞ்சல் வழியாகவோ, neetimpact2021@gmail.com என்ற இமெயில் வழியாகவோ தங்களது கருத்துக்களை அனுப்பலாம் என நீதியரசர் ஏ.கே.ராஜன் கமிட்டி தெரிவித்தது.

இந்நிலையில்,இன்று நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நீதியரசர் ஏ.கே.ராஜன் நீட் தேர்வின் தாக்கம் குறித்து தெரிவித்தார்.

மேலும்,இது தொடர்பாக நீதியரசர் ஏ.கே.ராஜன் கூறுகையில்:

"நீட் தேர்வு பாதிப்பு குறித்த தகவலை தொடர்ந்து சேகரித்து வருகிறோம்.அதன்படி,இதுவரை 25 ஆயிரம் பேர் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.அவ்வாறு கருத்து தெரிவித்தவர்களுள் நீட் தேர்வு வேண்டாம் என்று கூறியவர்களின் கருத்தே அதிகமாக உள்ளது.

எனவே,அனைத்து தரப்பினரின் கருத்துகளை அறிந்த பின் எங்களது இறுதி அறிக்கை தயார் செய்யப்படும்.மேலும்,அரசுஅளித்துள்ள காலவரம்புக்குள் எங்களது அறிக்கையை அளிக்க முயற்சிப்பதற்காக குழு உறுப்பினர்கள் அனைவரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்றும் பணிபுரிகிறோம் .எனினும், தேவைப்பட்டால் அரசிடம் கூடுதல் கால அவகாசம் கேட்க திட்டமிட்டுள்ளோம்",என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi