வாக்குறுதியை நிறைவேற்றாத அரசு மீது அரசு ஊழியர், ஆசிரியர்கள் அதிருப்தி

வாக்குறுதியை நிறைவேற்றாத அரசு மீது அரசு ஊழியர், ஆசிரியர்கள் அதிருப்தி

''தேர்தல் அறிக்கையில் கூறியடி வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க., அரசு மீது அரசு ஊழியர், ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்,'' என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மயில் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் அவர் கூறியதாவது: தி.மு.க., தேர்தல் அறிக்கையில் புதிய பென்ஷன் திட்டம் ரத்து, இடைநிலை ஆசிரியர் சம்பள முரண்பாடு களைவோம், உயர்கல்வி ஊக்க ஊதியம், நிறுத்தி வைத்த ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை மீண்டும் வழங்குவோம் என உறுதி அளித்தனர்.

ஆனால் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டாகியும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தி அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் ஏற்பட்டுள்ளது. செப்., 10ல் சென்னையில் ஜாக்டோ ஜியோ சார்பில் கோரிக்கை வாழ்வாதார மாநாட்டில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தோம்.

நவ., 3 ல் மாநில அளவில் தர்ணா நடத்தினோம். போராட்டம் தொடரும். அரசு ஊழியர்களில் சி மற்றும் டி பிரிவுக்கு அவுட்சோர்சிங் முறையில் ஆட்களை நியமிக்கும் அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

தி.மு.க., அரசு சரண்டர், அகவிலைப்படியை பறித்துவிட்டது. நியாயமான கோரிக்கைக்கு சிறை சென்றவர்களின் தியாகம் வீண் போகாது. 30 அம்ச கோரிக்கையை முன்வைத்து சென்னையில் 10,000 ஆசிரியர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும், என்றார். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் உடனிருந்தார்.

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi