50 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் அமேசான்!


கரோனா பாதிப்பால் பொதுமக்கள் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்குத் தேவையான பொருட்களை வழங்கவும்; தொழிலை விரிவுபடுத்தவும் 50 ஆயிரம் இந்தியர்களுக்கு வேலை வழங்குவதாக அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஏற்கெனவே ஆன்லைன் வர்த்தகத்திற்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு இருந்துவரும் நிலையில், ஊரடங்கு நேரத்தில், ஆன்லைன் வர்த்தகத்திற்கான தேவையும் வியாபாரமும் அதிகரித்துள்ளது.
எனவே, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், டெலிவரி உள்ளிட்டப் பல பணிகளுக்கு சுமார் 50 ஆயிரம் பேரைத் தேர்வு செய்து, தற்காலிக வேலைவாய்ப்பு வழங்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனத் தலைவர் கூறுகையில், 'கரோனா பாதிப்பில் பொதுமக்கள் வெளியே செல்லமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது, மேலும் பல பேர் வெளியே செல்ல விரும்பவில்லை. அதனால் அவர்களுக்குத் தேவையானதை வழங்கவே இந்த முடிவு எடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
கரோனா ஊரடங்கால் இந்தியப் பொருளாதாரம் மட்டுமல்லாமல், உலக பொருளாதாரமே கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அதனால், உலகம் முழுதும் கோடிக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே ஏராளமானோர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். ஊரடங்கால் வருவாய் ஈட்ட முடியாததால், உற்பத்தி சார்ந்த தொழில்துறைகள் உட்பட பல்வேறு தொழில்துறைகளில் பணிபுரிவோரும் வேலையிழந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த அறிவிப்பு, அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது' எனப் பாராட்டி வருகின்றனர்.

0 Response to "50 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் அமேசான்!"

Post a Comment