மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளைப் பெற திருநங்கைகளுக்கு பான்கார்டு கட்டாயம்



இந்தியாவில் அனைத்து வங்கி கணக்குகளும் பான் கார்டு, ஆதார் அட்டையுடன் இணைப்பது அவசியம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளை பெற இனி திருநங்கைகளும் பான் கார்டு வைத்திருக்க வேண்டும் என்றும், வங்கி கணக்குடன் பான் எண்ணை இணைப்பது அவசியம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து மகளிர் மேம்பாட்டு திட்ட அதிகாரிகள் கூறியதாவது: திருநங்கைகள் வாழ்வாதாரத்தை உயர்த்த மகளிர் மேம்பாட்டு திட்டத்தில் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து திருநங்கைகளுக்கு பவர் லாண்டரி,வாட்டர் பிளான்ட் உட்பட பல்வேறு தொழில்களுக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 120 பேர் வரை திருநங்கை சுயஉதவிக் குழுக்களில் இணைந்துள்ளனர்.


இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் வழங்கப்படும் மானியம்,சலுகைகள் ஆன்லைனிலேயே வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே,திருநங்கைகளுக்கு வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு சுயதொழில் மானியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில்,புதிதாக வங்கி கணக்குகள் தொடங்கவும்,ஏற்கனவே இருக்கும் வங்கி கணக்குகளை தொடர்ந்து பயன்படுத்தவும் பான் எண்,ஆதார் கார்டு எண் அவசியம் என்றும்,அவற்றை வங்கி கணக்குடன் ஜூன் 30ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மகளிர் மேம்பாட்டு திட்டம் மட்டுமின்றி,அனைத்து அலுவலகங்களிலும் மானியம்,சலுகைகள் பெற வங்கி கணக்கு கட்டாயம். எனவே, வங்கி கணக்கு பராமரிக்க அனைவரும் பான் எண்ணை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி,மகளிர் மேம்பாட்டு திட்டத்தில் உள்ள சுய உதவிக் குழுக்களின் வங்கி கணக்குடன் பான் எண் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.திருநங்கைகள் புதிதாக வங்கி கணக்குகள் தொடங்கவும், ஏற்கனவே இருக்கும் வங்கி கணக்குகளை தொடர்ந்து பயன்படுத்தவும் பான் எண், ஆதார் கார்டு எண் அவசியம்.