பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு

ஆனைமலை: பொள்ளாச்சி தாலுகாவிற்குட்பட்ட நகர் மற்றும் ஒன்றிய குடியிருப்பு பகுதிகளில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதை தொடர்ந்து 5வயது நிறைவடைந்த குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவில் நகர் மற்றும் வடக்கு, தெற்கு, ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குக்கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில், இலவச கட்டாய உரிமை சட்டப்படி அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்கும் வகையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறியும் கணக்கெடுப்பு பணி கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி துவங்கி, இம்மாதத்தில் நேற்று 25ம் தேதி வரை நடைபெற்றது.

இப்பணியில் பள்ளி ஆசிரியர், ஆசிரிய பயிற்றுனர், வட்டார வளமைய அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கல்வி தன்னார்வலர்கள், கிராம புற செவிலியர்கள், கல்வி குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் குடியிருப்புகளில் உள்ள வீடு வீடாகவும், தொழிற்சாலைகளிலும் நேரில் சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். அவர்கள், பள்ளி செல்லா குழந்தைகள் 5வயது முதல் 15வயதுடையவர்களையும், மாற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் 5வயது முதல் 17வயதுக்கு உட்பட்டவர்களையும் கணக்கெடுத்தனர். இதில், தாலுகாவிற்குட்பட்ட வடக்கு, ஆனைமலை, தெற்கு ஒன்றியம் மற்றும் நகராட்சிகுட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் சுமார் 150க்கும் மேற்பட்டோரும். மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் 50க்கும் மேற்பட்டோர் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, நகர் மற்றும் ஒன்றிய பகுதி குடியிருப்புகளில் நேரடியாக சென்று, குழந்தைகளின் பெற்றோர்களை சந்தித்து, 5வயது நிறைவடைந்த குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த, கல்வி அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வட்டார வளமைய கல்வி அதிகாரிகள் கூறுகையில், ‘இலவச கட்டாய உரிமை சட்டப்படி, 5வயது நிறைவடைந்த அனைத்து குழந்தைகளையும் முறையாக பள்ளியில் சேர்த்து, கல்வி கற்க வழிவகை செய்யும் வகையிலும். பள்ளி செல்லா குழந்தைகளே இல்லை என்ற நோக்கத்தில் தமிழக அரசு விடுத்துள்ள உத்தரவையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி முதல் இன்று(நேற்று) வரை என மொத்தம் 40நாட்கள், பள்ளி செல்ல குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இப்பணி நிறைவடைந்ததையடுத்து, 5வயது நிறைவடைந்த பள்ளி வயதுள்ள குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பது குறித்து வீடு வீடாக சென்று, குழந்தைகளின் பெற்றோருக்கு விழிப்புணர்வு அளிப்பதுடன். அரசு நலதிட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், உடனடியாக அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’ என்றனர்.