முதுகலை மருத்துவப் படிப்பு: கட் ஆஃப் மாற்றியமைப்பு!

தமிழகத்தில் முதுகலை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கு மாற்றியமைக்கப்பட்ட கட் ஆஃப் மதிப்பெண்ணை மருத்துவக் கல்வி இயக்குநரகம் தற்போது வெளியிட்டுள்ளது.


நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பு பயில விரும்பும் மாணவர்களுக்கு தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வான "நீட் தேர்வு" கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது, நீட் நுழைவுத் தேர்வின் அடிப்படையில், மருத்துவ முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் காலியாக இருந்தன. இதையடுத்து, மாணவர் சேர்க்கைக்கான கட் ஆஃப் மதிப்பெண்ணை 15 விழுக்காடு குறைப்பதாக சி.பி.எஸ்.இ. அறிவித்தது.இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான, புதிய கட் ஆஃப் மதிப்பெண்களை மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

இதில், பொதுப் பிரிவு மாணவர்களுக்கு 262 முதல் 320 மதிப்பெண்களும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கு 225 முதல் 280 மதிப்பெண்களும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 224 முதல் 299 வரையிலும் புதிய கட் ஆஃப் மதிப்பெண்ணை மாற்றியமைத்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் இந்தப் புதிய கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையில், இதற்கு முன்பு விண்ணப்பிக்காத மாணவர்கள் எல்லாம் தற்போது விண்ணப்பிக்கலாம் எனவும்மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.