என்ஜினீயரிங் கட் ஆப் மதிப்பெண் எப்படி தயார் செய்வது என்பது குறித்தும், எவ்வாறு கல்லூரிகளை, பாடப்பிரிவுகளை தேர்ந்து எடுப்பது என்பது குறித்தும் வீடியோவுடன் கூடிய ஆடியோ விளக்கத்தை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வை நடத்த உள்ளது. இதற்காக ஆன்லைன் மூலம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகிறார்கள். ஆனால் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ்-2 படித்த மாணவர்கள் மதிப்பெண்ணை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவேண்டியதில்லை.
காரணம், அரசு தேர்வுத்துறையில் இருந்து மாணவர்களின் மதிப்பெண்கள் அடங்கிய சி.டி. அனுப்பப்பட்டு அண்ணாபல்கலைக்கழக என்ஜினீயரிங் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் பெற்றுள்ளார். மதிப்பெண்ணை விண்ணப்பத்தில் பூர்த்திசெய்யும் பணியை அண்ணாபல்கலைக்கழகம் செய்து கொண்டிருக்கிறது.
என்ஜினீயரிங் சேர உள்ள மாணவர்களுக்கு கட்-ஆப் மதிப்பெண் முக்கியம். அது தெரிந்தால் தான் அவர்களுக்கு எந்த கல்லூரி கிடைக்கும் என்று கணக்கிட முடியும்.
மேலும் அந்த கட்-ஆப் மதிப்பெண்களை கொண்டு கல்லூரிகளை தேர்ந்து எடுப்பது எப்படி என்பது குறித்தும் விவரமாக வெளியிடப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் அந்த வீடியோவை பார்த்து அதில் கூறியபடி செய்தால் கல்லூரிகளை தேர்ந்து எடுக்கலாம்.
நேற்றுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்து 569 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:-
கட்-ஆப் குறைவது, கூடுவது குறித்து எதுவும் கூறமுடியாது. பிளஸ்-2 சி.டி.யை முழுவதும் பார்த்தால்தான் தெரிந்துகொள்ளமுடியும். கூடிய மட்டும் கட்-ஆப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்பு உள்ளது. அவ்வாறு குறைந்தால் கடந்த ஆண்டு பிளஸ்-2 முடித்து இப்போது விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு நல்ல கல்லூரி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
VIDEO : ஜெயலலிதா கைப்பட எழுதிய உணவுப்பட்டியல் வெளியீடு - முழு விவரம்