ஜூன் 11 முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் வரும் ஜூன் 11-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு மே 16-ஆம் தேதி வெளியானது. மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு திங்கள்கிழமை (ஜூன் 4) வெளியிடப்பட்டது. இதனையடுத்து எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ். படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகிக்கும் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த இடங்கள்: தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3,050 இடங்கள் உள்ளன. அவற்றில் 15 சதவீத அகில இந்திய இடங்கள் போக 2,594 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.

அதே போன்று தமிழகத்தில் உள்ள 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அவற்றில் அகில இந்திய இடங்கள் 30 போக, மீதம் உள்ள 170 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என அனைத்துக்கும் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் தேர்வுக்குழு கலந்தாய்வை நடத்த உள்ளது.

11-ஆம் தேதி முதல் விநியோகம்: தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் ஜூன் 11-ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்க உள்ளது. விண்ணப்பங்களைப் பெறுவதற்கு ஜூன் 18-ஆம் தேதி கடைசியாகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் தேர்வுக்குழுவுக்கு சென்று சேர ஜூன் 19-ஆம் தேதி கடைசியாகும்.

தரவரிசைப் பட்டியல்: தரவரிசைப் பட்டியல் ஜூன் 28-ஆம் தேதி வெளியிடப்படும். முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை நடைபெறும். இருப்பினும் அகில இந்திய கலந்தாய்வு தேதிகளின்படி கலந்தாய்வு தேதியில் மாற்றம் வரலாம்.
மேலும் விவரங்களுக்கு www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளத்தை மாணவர்கள் தொடர்ந்து பார்வையிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.