பத்தாம் வகுப்பு தேர்வு: செய்முறைப் பயிற்சிக்கு தனித்தேர்வர்கள் நாளை முதல் பதிவு செய்யலாம்


அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் செய்முறைப் பயிற்சிக்கு தனித்தேர்வர்கள் வெள்ளிக்கிழமை முதல் பதிவு செய்யலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 

நிகழ் கல்வியாண்டுக்கான (2018-19) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித்தேர்வர்களும், (முதல்முறையாக அனைத்துப் பாடங்களிலும் தேர்வெழுத இருப்பவர்கள்) ஏற்கெனவே கடந்த 2012 -ஆம் ஆண்டுக்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தவர்களும், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அனைத்து தனித்தேர்வர்களும் ஜூன் 8 -ஆம் தேதி முதல் ஜூன் 30 -ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும்.

பயிற்சி வகுப்புகளுக்கு 80 சதவீத வருகை தரும் தனித்தேர்வர்கள் மட்டுமே, மார்ச் - 2019 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர். செய்முறைப் பயிற்சி பெற்ற தேர்வர்கள், அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலரைத் தொடர்பு கொண்டு செய்முறைத் தேர்வு நடத்தப்படும் நாள்கள், மையத்தின் விவரம் ஆகியவற்றை அறிந்து தேர்வை தவறாமல் எழுதிட வேண்டும். செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளாத தேர்வரின் விண்ணப்பம் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களை தேர்வர்கள் தொடர்பு கொள்ளலாம். 

இதற்கான விண்ணப்பப் படிவத்தை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஜூன் 8 -ஆம் தேதி முதல் ஜூன் 30 -ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்ய வேண்டும். விவரங்களைப் பூர்த்தி செய்து, இரண்டு நகல்கள் எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரிடம் தனித் தேர்வர்கள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.