பழவகைகளில் சீதாப்பழத்திற்கு ஒரு தனி இடம் உண்டு. சீதாப்பழத்திற்கு ஆங்கிலத்தில் 'கஸ்டர்ட் ஆப்பிள்' என்று பெயர். இதன் தாவரவியல் பெயர் 'அனோனா ஸ்குவா மோசா.' ஆங்கிலத்தில் 'சுகர் ஆப்பிள்' என்றும் ஒரு பெயர் உண்டு. இந்தியாவில் அசாம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திராவில் சாகுபடி ஆகிறது.

நூறுகிராம் சீதாப்பழத்தில் அடங்கி உள்ள பொருட்கள் கீழ்கண்டவாறு இருக்கின்றன. புரதம் 1.6 கிராம், நார்ப்பொருள் 3.1 கிராம், மாவுப் பொருள் 23.5 கிராம், கொழுப்புச் சத்து 0.3 கிராம், கால்சியம் 17 மில்லிகிராம், பாஸ்பரஸ் 47 மி.கி., இரும்புச் சத்து 1.5 மி.கி., மெக்னீசியம் 48 மி.கி., பொட்டாசியம் 34 மி.கி., தாமிரம் 0.52 மி.கி., குளோரின் 3.7 மி.கி., தயாமின் 0.07மி.கி., ரைபோஃபிளோவின் 0.20 மி.கி., நியாசின் 1.3 மி.கி., வைட்டமின் 'சி' 37 மி.கி., ஆக்சாலிக் அமிலம் 30 மி.கி., சக்தி 104 கலோரிகள்.

சீதாப் பழத்திலுள்ள பல சத்துக்கள் இதயத்தைப் பலப்படுத்தி, சீராக இயங்கச் செய்யும். இதயம் சம்பந்தமான நோய்கள் வராது காக்கும் என அமெரிக்காவில் மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆரம்ப நிலை காசநோயைக் குணப்படுத்தும் சக்தி சீதாப்பழத்திற்கு உண்டு. மத்திமநிலை காச நோய் உள்ளவர்கள், இப்பழத்தைத் தின்று வர, நோய் கட்டுக்குள் இருக்கச் செய்யும்.

சீதாப்பழச்சாறு குடித்தால், கோடையில் ஏற்படும் கொடும் தாகம் தணியும். உடல் குளிர்ச்சி பெறும்.

தொடர் வாந்தி, குமட்டல் ஏற்பட்டால் ஒரு சீதாப்பழத்தை மென்று தின்றால் உடனே வாந்தி, குமட்டல் நிற்கும்.

அறுவை சிகிச்சைக்குப் பின் சீதாப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் உள்ளுறுப்புகளில் உள்ள இரணங்கள் விரைவில் ஆறும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் சீதாப்பழத்தைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் மாய்ந்து விடும்.

சிறிது வெந்தயத்தை ஊற வைத்து எடுத்து சீதாப்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர குடற்புண் விரைவில் குணமாகும்.

சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்கள் சீதாப்பழச் சாறுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து பருகினால் சிறுநீர் தாராளமாகப் பிரியும். நீர்க்கடுப்பும் நீங்கும்.

உடம்பு ஊளைச்சதை உள்ளவர்கள் தொடர்ந்து சீதாப்பழம் சாப்பிட்டு வர ஊளைச்சதை கணிசமாக குறையும்.

சீதாப்பழம் இரத்த விருத்தி செய்யும். சோகை நோயைக் குணப்படுத்தும்.