அமெரிக்காவில் இளநிலை பட்டப்படிப்பில் சேர இந்திய மாணவர்களிடம் ஆர்வம் அதிகரிப்பு


அமெரிக்காவில் இளநிலை பட்டப்படிப்பை மேற்கொள்ள இந்திய மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்திருப்பதாக அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி எம். ஜோசப் பாம்பர் கூறினார். மாணவர் விசா பெற இடைத் தரகர்களை நம்பவேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியது:
2017 -ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின்படி, அமெரிக்காவில் உயர் கல்வி படிக்க வரும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 12 சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைப் பொருத்தவரை சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இப்போது அமெரிக்காவில் 1.8 லட்சம் இந்தியர்கள் உயர் கல்வி படித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இளநிலை பட்டப் படிப்புகளில் சேர இந்திய மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்து காணப்படுகிறது. இளநிலை பட்டப் படிப்பின்போது, ஆராய்ச்சியும் ஊக்குவிக்கப்படும்.

அமெரிக்காவில் உயர் கல்வி படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்களின் பாதுகாப்பில் அமெரிக்கா தனிக் கவனம் செலுத்தி வருகிறது. இதுதொடர்பாக கல்வி நிறுவனங்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இடைத் தரகர்களை நம்ப வேண்டாம்: அமெரிக்காவுக்கு படிக்க வரும் இந்திய மாணவர்களில் சிலர், மாணவர் விசா பெற இடைத்தரகர்களை நாடுகின்றனர். மாணவர்கள் இடைத்தரகர்களை நம்பவேண்டாம். மாணவர்களுக்கு உதவுவதற்காகவே "எஜுகேஷன் யுஎஸ்ஏ' என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. மாணவர்கள் இதன் மூலம் தங்களுடைய சந்தேகங்களையும், அமெரிக்க கல்வி நிறுவனங்கள் குறித்த முழு விவரங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். வரும் ஜூன் 6 -ஆம் தேதி, சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் "மாணவர் விசா தினம்' கடைப்பிடிக்கப்பட உள்ளது.

இந்த தினத்தில் துணைத் தூதரகத்தில் மாணவர் விசா மட்டுமே வழங்கப்படும். வேறு எந்த விசாக்களும் வழங்கப்படாது. அமெரிக்காவில் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கடந்த ஆண்டில் 3,500 பேர் இந்தத் தினத்தில் மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்திருந்தனர் என்றார் அவர்.