இந்தத் தகவலை நேற்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ள சி.பி.எஸ்.இ நிர்வாகம், தமிழ்நாட்டில் 2017-ம் ஆண்டில் 82,272 பேர் நீட் தேர்வை எழுதி உள்ளனர். இந்த ஆண்டு 10 சதவிகிதம் மட்டுமே அதாவது, 90,000 மாணவர்கள் மட்டும் நீட் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்த்தோம்.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் 09.04.2018. ஆனால், உச்சநீதிமன்றம் ஆதார் இல்லாத மாணவர்களும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று நான்கு நாட்களை நீட்டித்தது. இதனால் எங்களுக்கு முன்னேற்பாடுகள் செய்ய போதுமான கால அவகாசம் குறைந்தது.
இதனால் தமிழ்நாட்டில் கூடுதல் மையங்களை ஏற்படுத்த முடியவில்லை. நீண்ட தூரத்தில் உள்ள ராஜஸ்தானில் நாங்களாகத் தேர்வு மையத்தை ஒதுக்கவில்லை. மாணவர்களின் விருப்பத்தின் பேரில் தேர்வு செய்திருந்தால் மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்க முடியும். நாங்களாக எந்த மையத்தையும் ஒதுக்கீடு செய்யவில்லை. கணினி வழியாகவே எல்லா மையங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே 8 முதல் 10 சதவிகித கூடுதல் இடங்களுடன் இந்த ஆண்டுக்கான தேர்வு மையங்களை அமைக்க முடிவு செய்தோம். இதில் தேர்வு மையத்தின் உள்கட்டமைப்பு, போதுமான தேர்வு அறைகள், தேர்வு பணிக்கான ஆசிரியர்கள், சுற்றுச்சுவர் உள்ள பள்ளியின் அமைப்பு, போதுமான இருக்கைகள் என எல்லாவற்றையும் கணக்கீட்டுத்தான் மையத்தை ஏற்படுத்தி உள்ளோம். இதற்காக வரிசை எண், தேர்வுத்தாள் என அனைத்தையும் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்துக்கு அனுப்பி விட்டோம்.
இந்த ஆண்டு கால்நடை அறிவியல், மீன்வளம், சித்தா, ஹோமியோபதி எனப் பிற படிப்புகளுக்கும் நீட் கட்டாயம் என மாற்றி இருப்பதால் நிறைய மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தேர்வு மையங்களும் நிறைந்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களை அருகில் உள்ள தேர்வு மையமாக எர்ணாகுளத்துக்கு மாற்றி உள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளது சி.பி.எஸ் இ.
கடைசி வரை தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் எவ்வளவு பேர் வெளிமாநிலங்களுக்குச் சென்று தேர்வெழுதுகின்றனர் என்ற விவரத்தை மட்டும் வெளியிடவில்லை.