கல்விக் கட்டண விவரங்களை ஆன்லைனில் பதிவேற்ற தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு

கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படாத தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயத்துக்குத் தேவையான விவரங்களை உடனடியாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கல்விக் கட்டண நிர்ணயக் குழு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 9,500-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் 6,500 பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு விட்டது. எஞ்சியுள்ள சுமார் 3,000 பள்ளிகளுக்கு நிகழ் கல்வி ஆண்டுக்கு (2018-19) இன்னும் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை.
இந்த நிலையில், கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்வதற்குத் தேவையான விவரங்களை உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யுமாறு தனியார் கல்விக் கட்டண நிர்ணயக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக அந்த குழுவின் தனி அலுவலர், முதன்மை கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள், தொடக்கக் கல்வி அதிகாரிகள், உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள்ஆகியோருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.